தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் திமுக அரசின் நலத்திட்டங்கள் தொடர, லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் பேசினார்.
நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தில் பணிமனையில் நடைபெற்றது. தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் முன்னிலை வகித்தார். நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. பேசியதாவது:-
இந்தியா முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் கடுமையாக இருந்தபோது, தமிழகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் முழுமையாக தடுப்பூசி போட்டு நோய் பரவலை கட்டுப்படுத்தினார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ. 5 ஆயிரம் கொரோனா உதவித்தொகை கேட்டோம், ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்திற்கு ரூ. 4 ஆயிரம் வீதம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பால் விலையை குறைத்து பால் உற்பத்தி விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தி வழங்கப்பட்டது. 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக அரசு அதனை செயல்படுத்தவில்லை. அறிஞர் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதிக்கு பிறகு குழந்தைகள் பசியோடு பள்ளிக்கு செல்லக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம், மாணவர்களுக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை கிடைக்காதவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது ஆனால் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை.
நாமக்கல் நகராட்சிக்கு பல எண்ணற்ற திட்டங்களாக, 100 கிலோ மீட்டருக்கு அனைத்து பகுதிகளிலும் தார் சாலை வசதி, குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதலைப்பட்டியில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, நாமக்கல்லுக்கு ரூ.192 கோடி மதிப்பில் பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி ரோடு, பரமத்தி ரோடு பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டத்திற்கு என தனியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. மத்திய அரசு கல்விக் கடனை தள்ளுபடி செய்யவில்லை. பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே லட்சக்கணக்கான கோடிகளை தள்ளுபடி செய்து வங்கிகளை திவால் ஆக்கி விட்டனர், பெட்ரோல், டீசல், கேஸ் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் நீங்கள் நாமக்கல் லோக்சபா தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, நாமக்கல் கிழக்கு நகர செயலாளர் பூபதி, மேற்கு நகர செயலாளர் சிவக்குமார், தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் உள்ளிட்ட திரளான திமுக, கொமதேக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.