அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ரூ.18 லட்சம் இழப்பீடு தராததால் அதிகாரியின் கார் ஜப்தி
ரூ. 18 லட்சம் இழப்பீடு வழங்காததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரியின் காரை கோர்ட் அலுவலர்கள் ஜப்தி செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் அடுத்த, சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் நிர்மல்குமார் (39) கூலி தொழிலாளி. அவரது தாயார் சந்திரா, (58). தங்கை வாசுகி (34). இவரது தந்தை ரங்கநாதனுக்கு சொந்தமான 87 சென்ட் நிலம், வீசாணம் கிராமத்தில் இருந்தது.
அந்த நிலத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், காலனி விரிவாக்கத்துக்காக, 1998 ம் ஆண்டு கையப்படுத்தப்பட்டது. அதற்காக ரூ. 87 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகை குறைவாக இருப்பதாக அவர்கள் நாமக்கல் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட, 2018 ல் சதுர அடிக்கு ரூ. 12 ரூபாய் வீதம், ஆறுதல் தொகை 15 சதவீதம், மேலும் 9 சதவீதம் வட்டியுடன் வழங்க, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ரூ. 18 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள் அந்த தொகையை வழங்கவில்லை.
அதையடுத்து 2019ம் ஆண்டு, கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 5 கார்களில் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கோர்ட் அமீனா மற்றும் அலுவலர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரின் காரை ஜப்தி செய்ய முயன்றனர். அப்போது, அங்கு வந்த அரசு அலுவலர்கள், கோர்ட் அலுவலர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. மேலும், அரசு டிரைவர் மாயமானதால், தனியார் டிரைவரை பயன்படுத்தி, திட்ட இயக்குனரின் காரை ஜப்தி செய்து, கோர்ட் வளாகத்தில் நிறுத்தினர்.