நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்களில் 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்களில் 2 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்கா, வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தரம்-சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரின் மகள் சிறுமி தனுஷியா(15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற மணமகனுக்கும், குழந்தை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக, கடந்த 5ம் தேதி மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்து.
கலெக்டரின் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அலுவலர்கள் வளையப்பட்டிக்கு சென்று அத்திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டனர். அவருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், ராசிபுரம் தாலுக்கா, ஆர்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன்-சரண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரின் மகள் மகள் சிறுமி லாவண்யா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு குழந்தை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கடந்த 6ம் தேதி தகவல் வந்தது. அதிகாரிகள், அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். இத்திருமணங்களை ஏற்பாடு செய்தவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின்படி, 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குற்றமாகும். மீறுவோர் மீது சட்டப்படி 2 ஆண்டுவரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குழந்தை திருமணம் குறித்து போன் நம்பர் 181 மற்றும் 1098 மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.