கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்: நாமக்கல் ஆட்சியர்
நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சிறுபான்மையினர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறங்களாக இருப்பின் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.
அதிகபட்ச கடனாக ரூ. 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை வழங்கப்படும். கைவினைக் கலைஞர்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிறுபான்மையினர் கடன் பெற தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.