பரமத்திவேலூர் மின் மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களை எரியூட்ட அனுமதிக்க வேண்டும்
பரமத்திவேலூர் மின் மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களை எரியூட்ட அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
HIGHLIGHTS
பரமத்திவேலூர் மின் மயானத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் மாவட்ட கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாய முன்னேற்றக்கழக தலைவர் செல்ல ராசாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சீரிய முறையில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் நோயின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. ஒரு சிலர் சீன கொரோனா தொற்றின் தீவிரத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிடுகிறார்கள். கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் நாமக்கல் மின் மயானத்திற்கு அதிக அளவில் எரியூட்டுவதற்கு கொண்டுவரப்படுகிறது.
சடலங்கள் அதிகளவில் வரும்போது அங்கு மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மின்மயானத்தில் கொரோனா நோயாளிகளுடைய சடலங்களை எரிக்க மறுக்கின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் நோயாளிகளுடைய இறந்த உடல்களை எரியூட்டுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் டவுன் பஞ்சாயத்திற்கு சொந்தமான மின் மயானத்தை தனியார் வசம் ஒப்படைத்து அவர்களுடைய பராமரிப்பில் இருந்து வருவதுதான்.
எனவே, மாவட்ட கலெக்டர் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து மின் மயானத்தை ப.வேலூர் பேரூராட்சி பொறுப்பின் கீழ் கொண்டு வந்து கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அங்கு காலதாமதமின்றி எரியூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளனர்.