ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டு மனைகள் ஏலம்
ஈமு பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீட்டு மனைகள் வரும் 21ம் தேதி ஏலம் விடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல்லில் தனியார் ஈமு பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீட்டு மனைகள் வருகிற 21ம் தேதி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல், மோகனூர் ரோட்டில் இயங்கி வந்த, செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடி செய்ததால், குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரால் விசாரணை செய்யப்பட்டது. இது குறித்து, கோவை, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு கோர்ட் உத்தரவின்படி, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் சிவக்குமார், கனகம் மற்றும் பழனியம்மாள் ஆகியோர்களிடம் இருந்து 3 வீட்டு மனைகள் பறிதமுல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பிள்ளைகளத்தூர் கிராமத்தல் உள்ள, தலா 2,360 சதுரடிகள் கொண்ட 2 வீட்டுமனைகள், மற்றும் ராசிபுரம் தாலுக்கா, காட்டூர், காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள 3,716 1/4 சதுரடி கொண்ட வீட்டுமனை (மனை எண்: 38) ஆகிய 3 வீட்டு மனைகள், நாமக்கல், மாவட்ட வருவாய் அலுவலரால், வருகிற 21ம் தேதி மாலை 3 மணிக்கு நாமக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் தசில்தார் அலுவலகம் மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு ஆர்டிஓ அலுவலகம் ஆகிய அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஏல நிபந்தனைகள் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், ஏல தேதிக்கு முன்பாக, விருப்பமுள்ளவர்கள், நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் டிஎஸ்பி மூலம் ஏல சொத்துக்களை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.