கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடனுதவி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கோவிட்-19 தொற்று ஊரடங்கால், ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு 2022-23 ஆம் ஆண்டிற்கு இரண்டு பிரிவுகளின்கீழ் கோவிட் உதவி மற்றும் தொழில்முனைவோருக்கான நிவாரணத் திட்டத்தை (கேர்) அறிவித்துள்ளது.
இதன்படி, மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம் மற்றும் ஊக்கத் திட்டம் ஆகிய பிரிவுகளில் செயல்படுத்தப்படுகிறது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு நலிந்த தொழில்முனைவோரை மீண்டும் தொழில்களை நிறுவிட அல்லது புதிய நிறுவனத்தைத் தொடங்கிட அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்படும். 2020-21-ல் தொற்றுநோயினால் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் சேவைத் துறை தொழில்நிறுவனங்களை உள்ளடக்கியவை இதன் மூலம் பயன் பெறலாம். அதிகபட்ச திட்டச் செலவு ரூ.5 கோடியாகவும், மூலதன மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.25 லட்சமாகவும் இருக்கும். மானியத்துடன் இணைக்கப்பட்ட திட்டத்திற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமில்லை.
ஊக்குவிப்புத் திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் / நவீனமயமாக்கல் ஆகியவற்றை மேற்கொள்பவர்களுக்கானது. ஊக்கத் திட்டத்திற்கு, தொழில்நுட்ப மேம்படுத்தல் / நவீனமயமாக்கலை மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோவிட்-19 தொற்றுநோயால் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மானியத்திற்கு தகுதியுடையவர்கள். மூலதன மானியமாக ஆலை மற்றும் இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.25 லட்சத்திற்கு உட்பட்டு வழங்கப்படும்.
இத்திட்டம் 2022-23 ஆண்டிற்கு மட்டும் நடைமுறையில் இருக்கும். நாமக்கல் மாவட்டத்தில், பாதிக்கப்பட்டுள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழக அரசு வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத தொடர்பாக தகவல் பெறலாம்.மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.