பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தியை உடனே துவக்க ஈஸ்வரன் கோரிக்கை
பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தியை உடனே துவக்க ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழக அரச, பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்று கொ.ம.தே.க. ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு உடனடியாக நூல் கொள்முதல் செய்து, பொங்கலுக்கான, இலவச வேட்டி, சேலை உற்பத்தியை துவக்க வேண்டும். ஜூன் மாதமே நூல் கொள்முதல் செய்து, உற்பத்தி தொடங்கினால் தான் பொங்கலுக்குள் வேட்டி, சேலை தயாரித்து வினியோகிக்க முடியும். கால தாதமதம் ஆனதால், சென்ற ஆண்டு பொங்கலுக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை வினியோகிக்க முடியாமல் போனது. தாமதமாக பணியை ஆரம்பித்தால், உற்பத்தியை வேகப்படுத்தி, தரமும் சரியில்லாமல் போகும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தாமதமானதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது.
இந்த ஆண்டு அவை அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். கைத்தறித் துறை அதிகாரிகள் துரிதமாக செயல்படவேண்டும். நல்ல தரமான நூலை சரியான நேரத்தில் கொள்முதல் செய்தால், பாதி வேலை முடிந்துவிடும். அடித்தட்டு மக்களுக்கான திட்டம் இது. மனநிறைவோடு மக்கள் பொங்கலை கொண்டாடும் வகையில் சரியான நேரத்தில் உயரிய தரத்தோடு வேட்டி சேலைகள் வழங்கப்பட வேண்டும். இன்னும் தாமதப்படுத்தாமல் உடனடியாக உற்பத்தி நடைமுறைகள் துவங்கப்படவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.