நாமக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு: போலீசார் விசாரணை
நாமக்கல்லில் நடந்துசென்ற பெண்ணிடம், தங்க செயினை பறித்துச்சென்று மர்ம நபர்களின் போட்டோக்களை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
நாமக்கல், போதுப்பட்டி ரோட்டில் வசித்த வருபவர் வரதம்மாள் (77). இவர் நேற்று காலை 8 மணியளவில், வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக, முல்லைநகரில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் கே.கே.பி தெரு வழியாக நடந்து சென்றபோது, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென வரதம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
பின்னர் இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் செல்லும் 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரின் போட்டோக்களை வெளியிட்டுள்ள போலீசார், அவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாமக்கல் பகுதியில் அடிக்கடி நடைபெறும் செயின் பறிப்பு மற்றும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.