பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரும் 11ம் தேதி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி
நாமக்கல் மாவட்டத்தில் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 11ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 11ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வருகிற 11ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 1.30 மணி முதல் தொடங்கி நடைபெறும்.
இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வீதம் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள், அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படும். இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வீதம் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி தலைப்புகள் : அம்பேத்கரின் இளமை பருவம், பூனா உடன் படிக்கை, அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி, பவுத்தத்தை நோக்கி, அம்பேத்கரும் காந்தியடிகளும், வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கரின் பங்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், சமூக நீதி என்றால் என்ன, அரசியலமைப்பின் தந்தை, சட்ட மேதை அம்பேத்கர்.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி தலைப்புகள் : கற்பி ஒன்று சேர், புரட்சி செய், பூனா உடன் படிக்கை, புத்தரும்அவரின் பவுத்தமும், கூட்டாட்சி கோட்பாடும் பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சுதந்திரம்,- சமத்துவம் - சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள், அம்பேத்கர் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.
கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வழியாகவும், பள்ளி மாணவ மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூடுதல் கட்டிடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் - 04286 - 292164 ஐ தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உமா பரிசுகளை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.