நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் அறிவுரை
நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, ஆலோசனைக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அதிகாரிகளை வலியுறுத்தினார்.
HIGHLIGHTS
நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, ஆலோசனைக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அதிகாரிகளை வலியுறுத்தினார்.
நாமக்கல் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள, மழைநீர் செல்லும் கால்வாய்களை, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தூர் வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளம், வரத்து வாய்க்கால்கள், நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
மழை நீர் கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்றும் அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மேலும், மழைக்காலங்களில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில், அத்தியாவசியப் பொருட்களை பாதுகாப்பான இடங்களில் சேகரித்து வைக்க வேண்டும்.
தற்போது, காய்ச்சல் முகாம்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், சித்த மருத்துவ நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து, வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், தன்னார்வத்துடன் பணியாற்ற வேண்டும்.
வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை, பொதுமக்கள் உடனுக்குடன் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 மூலம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் டிஎன்ஸ்மார்ட் என்ற செல்போன் அப்ளிகேஷனை தங்களது மொபைல் போனில் டவுன் லோடு செய்து, மழைகுறித்த பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், கோட்டாட்சியர்கள் நாமக்கல் சரவணன், திருச்செங்கோடு சுகந்தி, ஆட்சியரின் நேற்முக உதவியாளர் மாதவன்உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.