நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் குழந்தை தொழிலாளர் மீட்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் குழந்தை தொழிலாளர் மீட்கப்பட்டு கலெக்டர் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
HIGHLIGHTS
18 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் தொழில் நிறுவனங்களின் மீது குழந்தைத் தொழிலாளர் சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை 138 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 452 குழந்தைத் தொழிலாளர் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தப்பட்ட நிறுவனங்களின் மீது வழக்குகள் போடப்பட்டு அபராதமாக ரூ.17 லட்சத்து 9 ஆயிரத்து 62 வசூலிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வில் நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆய்வின் போது பள்ளிபாளையம் பகுதியில், வாட்டர் சர்வீஸ் ஸ்டேசனில் பணியில் இருந்த ஒரு சிறுவன் மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டான்.கலெக்டர் அந்த சிறுவனை குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்திய நிறுவனங்களின் மீது குழந்தைத்தொழிலாளர் சட்டத்தின் படி ரூ.20ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரம் அபராதமும் 6 மாத சிறைதண்டனையும், மறுமுறை செய்தால் 2 வருட சிறைதண்டனையும் விதிக்கப்படும். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலக எண் 04286 280056, திட்ட இயக்குநர் செல் போன் 98421 96122 மற்றும் சைல்டு லைன் 1098 என்ற எண்ணிற்கு தெரிவிக்குமாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வில், சங்ககிரி தொழிலாளர் துணை ஆய்வாளர் கோமதி, ராசிபுரம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் மாலா, திருச்செங்கோடு தொழிலாளர் உதவி ஆய்வாளர் மோகன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் அந்தோணி ஜெனிட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.