'தமிழகத்தில் இருப்பது வெறும் அறிவிப்பு அரசு' -பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
‘தமிழகத்தில் இருப்பது வெறும் அறிவிப்பு அரசு’ என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.
HIGHLIGHTS
நாமக்கல் அருகே புதுப்பாளையத்தில் நடைபெற்ற கோயில் கும்பாபிசேஷக விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. அரசு, கடந்த 10 மாதமாக அறிவிப்பு அரசாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும், புதிய பெயரை சூட்டி, தங்களது திட்டம் போல காட்டிக்கொள்கிறது. மத்திய அரசின் திட்டத்தை, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டியது கடமை. ரஷ்யா – உக்ரைன் போரில், சிக்கித்தவித்த 1,866 தமிழக மாணவ, மாணவியர், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளனர். மேலும் 34 பேர், அங்கிருந்தே பாதுகாப்பாக படிப்பதாக கூறி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சியால் மட்டுமே, பாதுகாப்பாக அவர்களை மீட்க முடிந்தது. ஆனால், இங்கிருந்து ஒரு குழுவை அமைத்து, அக்குழு டெல்லி வரை சென்றதாகவும், டெல்லியில் தங்கி இருந்துவிட்டு தமிழகம் வந்த பின், அக்குழுவால் தான் இது நடந்தது என, தமிழக முதல்வர் அறிக்கை அளிக்கிறார். தங்களுடைய முயற்சியால் தான் மீட்கப்பட்டதாக கூறுகிறார். இது ஏற்புடையதல்ல. தமிழக மக்கள் மீது பிரதமர் கொண்டுள்ள அன்பின் காரணமாக, அவர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளார். ஆனால், மாநில அரசு, அதற்கு தாங்கள் செய்ததாக கூறுவது நியாயமல்ல. அறிவிப்பு அரசாக மட்டுமே தி.மு.க அரசு உள்ளது. மக்களுக்கு சேவை செய்யும் திறமையான அரசாக இல்லை. இலங்கை தமிழர்களுக்காக, பிரதமர் நரேந்திர மோடி அக்கறை எடுத்து செயல்பட்டு வருகிறார். தி.மு.க வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிட்டு வருகிறது. எதையும் செயல்படுத்தவில்லை. உலகத் தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தருவது தான், உண்மையான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
இந்தியாவும், இலங்கையும் போட்ட ஒப்பந்தத்தில், 13வது அமெண்ட்மெண்ட் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை நிச்சயமாக இலங்கை அரசு நிறைவேற்றும். பா.ஜ. ஆட்சிக்கு வந்த பின், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க.வினர் வெறும் வேடம் போடுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அவர் கூறினார்.