நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தீக்குளிக்க முயற்சி
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்தில் தூய்மைப் பணியாளராக கேசவன் (43) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக நிரந்தரப் பணியாளராக உள்ளார். சில மாதங்களுக்கு முன் தூய்மைப் பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட சங்கத்தில் அவர் இணைந்து நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில், சங்கத்தில் இணைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கேசவனை அடிக்கடி கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கேசவன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார்.
கலெக்டர் அலுவலக போர்ட்டிகோ பகுதியில், கலெக்டர் கார் நிற்கும் இடத்தில், அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார். அதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, அவர் மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் போலீசார் அவரை நல்லிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.