பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க 3 நாள் சிறப்பு முகாம்
பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க 3 நாள் சிறப்பு முகாம் மோகனூரில் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
பிரதமரின் கிஷான் சம்மான் திட்டத்தில், விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்க, மோகனூரில் நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மோகனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பிரதமரின் கிசான் சம்மான் யோஜனா திட்டத்தில், 4 மாதங்களுக்கு ஒருமுறை, ரூ. 2,000 வீதம் விவசாயிகளுக்கு உதவித்தொகை, அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. வரும், ஜூலையில், 14ம் தவணை நிதி விவசாயிகள் பெறுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை, தங்களுடைய சரியான ஆதார் எண்ணை இணைக்காத, ஆதார் எண் விடுபட்டுப் போன விவசாயிகள், வரும், 7ம் தேதி, வளையப்பட்டி தபால் அலுவலகத்திலும், 8ம் தேதி பாலப்பட்டி தபால் அலுவலகத்திலும், 9ம் தேதி மோகனூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திலும், தபால் துறை அலுவலர்களால் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாமில், விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் ஆகியவற்றுடன் நேரில் சென்று, தங்களது கிஷான் திட்ட கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து, விபரங்களை சரிபார்த்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.