நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மன்றத்தில் 2,605 வழக்குகள், ரூ.14.47 கோடி மதிப்பில் தீர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 2,605 வழக்குகளுக்கு, ரூ.14.47 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை வகித்தார்.
நீதிபதிகள் பாலகுமார், கிருஷ்ணன், சுந்தரையா, ஜெயபிரகாஷ் மற்றும் தாலுக்கா அளவிலான சட்டப் பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விஜய் கார்த்திக் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். சாலை விபத்துகள் தொடர்பான வழக்குகள், செக் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
பரமத்திவேலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் 2018-ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்ததை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அவரது மனைவி அம்சவள்ளி, மகள் மேகலா, மகன் கார்த்திக் ஆகியோருக்கு இழப்பீடாக ரூ.57 லட்சத்து 4 ஆயிரத்து 477 வழங்க உத்தரவிடப்பட்டது. சாலை விபத்தில் காயமடைந்த தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த அன்னகுமார் என்பவருக்கு ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது.
திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தம்க 4,051 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 2,605 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.14 கோடியே 47 லட்சத்து 40 ஆயிரத்து 842 மதிப்பில் பைசல் செய்யப்பட்டது.