நாகை அருகே 1500 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு : இரண்டு பேர் கைது
நாகை அருகே கள்ளச் சாராயம காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் 1500 லிட்டர் சாராய ஊறலை தரையில் கொட்டி அழிததனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி வைத்து அதிக லாபத்துக்கு சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் பெரும்பாலான இடங்களில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வடக்குபொய்கை நல்லூர் காரைகுளம் பகுதியில் சாராயம் காய்ச்சப் படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காரைகுளம் பனை தோப்பில் பூமிக்கு அடியில், 6 பேரல்களில் 1500 லிட்டர் சாராய ஊறல்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குழி தோண்டி அந்த 6 பேரல்களையும் போலீசார் வெளியே எடுத்தனர். தொடர்ந்து அதனை தரையில் கொட்டி அழித்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அப்புக்குட்டி என்கிற முருகானந்தம் (வயது 38), மணிகண்டன் (24) ஆகிய 2 பேரை கைது செய்து மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.