ரேஷன் மண்ணெண்ணெய் கடத்தல், அதிரடியாக சேஸ் செய்து பிடித்த போலீசார்
குமரியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மண்ணெண்ணையை கடத்த முயன்ற வாகனத்தை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளுக்கு மானிய விலையில் அரசால் வழங்கப்படும் மண்ணெண்ணையை அதிக லாபத்திற்க்காக வேண்டி கேரளாவுக்கு கடத்தி சென்று விற்கும் தொழிலில் சில சமூக விரோதிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சொகுசு வேன் ஒன்று இரையுமன்துறை மீனவ கிராமத்தில் இருந்து மண்ணெண்ணெய் கேன்களை ஏற்றி கொண்டு நித்திரவிளை வழியாக கேரளாவுக்கு கடந்து செல்ல முயன்றது.
அப்போது அந்த இடத்தில் இரவு பணியில் நின்றிருந்த போலீசார் சந்தேகமடைந்து வாகனத்தை நிறுத்த சைகை காட்டி உள்ளனர். ஆனால் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் நிறுத்தாமல் அதிவேகமாக கடந்து சென்றுள்ளார்.
இதனால் சந்தைகமடைந்த தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் போலீசார் அந்த வேனை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பின்தொடர்ந்தது துரத்தி சென்று கிராத்தூர் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர்.
இந்நிலையில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பி ஓடிய நிலையில் வாகனத்தில் உள்ளே சோதனை செய்த போது வாகனத்தின் பின்பாகத்தில் சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 கேன்களில் மண்ணெண்ணெய் இருப்பது தெரிய வந்தது.
மேலும் இது படகுகளுக்கு அரசால் கொடுக்கப்படும் மானியவிலை மண்ணெண்ணெய் என்பதும் அதனை கேரளாவிற்கு கடத்த முயற்சித்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த வாகனத்துடன் மண்ணெண்ணையை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து மேற்கொண்ட விசாரணையில் அந்த வாகனம் பூத்துறை பகுதியை சேர்ந்த ஒருவருடையது என்றும் தப்பி ஓடிய ஓட்டுநர் கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த அனீஷ் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து நித்திரவிளை போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.