குமரியில் அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு வந்த அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குமரியில் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை சரி இல்லை என கூறி அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த காலத்தில் அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்திலேயே தரம் கூடிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சரியான சிகிச்சை இல்லை என்றும் நோயாளிகள் அவமரியாதையுடன் நடத்தப்படுவதாகும், லஞ்சம் தலை விரித்தாடுவதாகவும், லஞ்சம் கொடுக்கவில்லை உயிரிழப்பு நிச்சயம் என அடுக்கடுக்கான புகார்கள் இருந்து வந்தது.
இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அரவிந்தும் சென்றார். அப்போது அமைச்சரை சூழ்ந்து கொண்ட நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை குறித்து அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது கணவருக்கு சிகிச்சை கொடுக்காமல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியமாக நடப்பதாகவும் இதனால் தனது கணவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் கூறி இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டம் நடைபெறும் போது அங்கு வந்த அமைச்சர் அவரிடம் விவரங்களை கேட்டறிந்தார். மேலும் தவறுகள் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.