குமரி மாவட்ட கோவில்களில் தரிசனத்திற்கு தடை: பக்தர்கள் ஏமாற்றம்
குமரி கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வாசலில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பரவல் மூன்றாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ள தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
அதன் ஒரு பகுதியாக வார இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கு தடை விதித்து உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மூன்றாம் அலை பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அரசு உத்தரவுப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி கோவில்களான சுசீந்திரம், மண்டைக்காடு உட்பட அனைத்து கோவில்களும் இன்று அடைக்கப்பட்டன. அதன்படி கோவில்களில் பக்தர்கள் இன்றி ஆகம விதிப்படி நித்திய பூஜைகள் அனைத்தும் நடைபெற்றன.
இதனிடையே மார்கழி மாதம் வெள்ளி கிழமையை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.