கன்னியாகுமரி கடற்கரையில் மயில்கள் கூட்டம்; சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
குமரிக் கடற்கரையில் மயில்கள் கூட்டம் கண்கொள்ளா காட்சியாக அமைவதோடு, சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
HIGHLIGHTS
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக மயில்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலி துறை கடற்கரை பகுதியில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக போடப்பட்டுள்ள கற்களின் மீதும், காந்தி மண்டபத்தில் பின்பக்கம் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் இந்த மயில்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.
சில நேரங்களில் மழை மேகத்தை கண்டு ஆண் மயில்கள் தோகை விரித்து ஆடும் அழகிய காட்சியும் அவ்வப்போது நிகழ்கின்றது. இந்த அழகிய காட்சியை கடற்கரைப் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடி நின்று பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.
மேலும், மயில்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதோடு மட்டுமின்றி, தங்களது செல்போன்கள் மூலம் படமெடுத்தபடி செல்கின்றனர்.