குமரி மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாள்!
குமரி மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாள் நடைபெற்றது.
HIGHLIGHTS
குமரி மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில், காவலர் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில், நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டா்கள், ஆயுதப்படை போலீசார் என பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பேசியதாவது:-
1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்பு படை போலீசார் 10 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில், நாட்டுக்காகவும், மக்கள் பணியின்போதும் வீரமரணம் அடைந்த போலீசாரை நினைவு கூற வேண்டும். அவர்களது பணி நாட்டின் முக்கிய சேவையாக இருந்துள்ளது. போலீசார் தங்களது பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.