கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.
HIGHLIGHTS
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான அய்யப்பபக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து குவிந்தனர்.
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு அவர்கள் முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில்களில்பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடஇன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகுபோக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.