தரமற்ற உணவு: காஞ்சிபுரத்தில் 3 அசைவ ஹோட்டல்களில் விற்பனைக்கு தடை..
காஞ்சிபுரத்தில் உள்ள 3 அசைவ ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அங்கு தரமற்ற உணவு வைத்திருந்ததால் விற்பனைக்கு தடை விதித்தனர்.
HIGHLIGHTS
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் நலன் கருதி தரமான உணவுப் பொருட்களை தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் கலப்பட பொருளை கொண்டு உற்பத்தி செய்யும் பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்டறிந்து அதற்கு உண்டான அரசு விதிகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், இனிப்பகங்களில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மா. ஆர்த்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், இனிப்பகங்களில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே, காஞ்சிபுரத்தில் உள்ள சில அசைவ உணவகங்களில் உணவுகள் தரம் குறைந்து உள்ளதாகவும் இனிப்பகங்களில் காலாவதியான பொருட்கள் இருப்பதாகவும் கலப்பட பொருட்களைக் கொண்டு உணவுகள் தயாரிப்பதாகும் வாட்ஸப் மூலம் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் பெறப்பட்டது.
இதையெடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரபாத் அசைவ உணவகம், ரயில்வே சாலையில் உள்ள சலீம் பிரியாணி கடை உள்ளிட்ட உணவங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியான உணவுகள் பதப்படுத்தப்பட்டு பிரீசரில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், உணவு சுகாதார துறை சார்பில் வழங்கப்படும் எந்தவித அனுமதியும் அந்த ஹோட்டல்களில் பெறப்படவில்லை என்பதும், உணவு கூடங்கள் சுகாதார முறையில் பயன்படுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்ததால் தரமற்ற உணவு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தியதாகக் கூறி அந்த ஹோட்டல்களில் உணவு விற்பனை செய்ய அதிகாரிகள் தற்காலிகமாக தடை விதித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த இனிப்பகங்களில் வர்ணங்களுக்காக செயற்கையான பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பழக்கடைகளில் அழுகிய பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையெடுத்து, 6 கடைகளுக்கு விற்பனை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்படும் தனியார் அசைவ உணவகத்தில் சமையலறை சுகாதார சீர்கேடு, காலாவதியான உணவுகளை விற்பனை செய்தல், உணவு பரிமாறுதல் செய்பவர்களுக்கான முறையான பயிற்சி இல்லாதது, உணவு பாதுகாப்புத்துறை உரிமம் காலாவதியானது உள்ளிட்ட பத்து குறைகளுடன் செயல்பட்டது கண்டறியப்பட்டதால் அந்த கடையிலும் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா உத்தரவிட்டார்.
மேலும் சிறு காவேரிப்பாக்கம் ரயில்வே சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கொண்டு விற்பனைப் பொருட்களை கொடுக்க முயன்றபோது அதனை ஆய்வு மேற்கொண்டு, 6 கடைகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வு மேற்கொண்ட அனைத்து உணவகங்களுக்கும், இனிப்பு கடை மற்றும் பழக்கடைகளுக்கு தகுந்த அறிவுரை வழங்கிய மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, முறையான உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று செயல்பட வேண்டும் என்றும் அரசு விதித்த உணவு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கையாள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.