கோவில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை" திட்டம் : ஈரோட்டில் இன்று முதல் அமல்.
அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் பண்ணாரியம்மன் கோவிலில் இன்று முதல் அமலுக்கு வந்தது.
HIGHLIGHTS
தமிழக அரசு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அரசின் செயல்பாடுகள், எழுத்து பயன்பாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் தமிழ் மொழியை பயன்படுத்த, தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இதன்படி, அரசு கட்டடங்களில் 'தமிழ் வாழ்க' என்ற வாசகத்துடன் பெயர் பலகையை வண்ண விளக்குகள் வைத்துள்ளனர். அத்துடன் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை துவங்கி உள்ளனர்.
தமிழில் அர்ச்சனை என்பது பல கோவில்களில் நடைமுறையில் இருந்தாலும், அதை செம்மைப்படுத்தும் வகையில் 'அன்னை தமிழில் அர்ச்சனை' என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர்களை கொண்ட பலகைகளை கோவிலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவின்படி கோவிலில் பூஜை செய்பவர்கள் தமிழில் கட்டாயம் அர்ச்சனை செய்ய வேண்டும், என்பது படிப்படியாக அனைத்து கோவில்களிலும் அமலாகி வருகிறது. தமிழகத்தில் இன்று, 47 முக்கிய கோவில்களில் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டத்தில், பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.