ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக உள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
HIGHLIGHTS
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், கர்நாடக அணைகளிலிருந்து நீர்திறப்பு வினாடிக்கு 10,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று வரை வினாடிக்கு 14,000 கன அடியலிருந்த நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 19,000 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 23,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் வினாடிக்கு 5,000 கன அடி நீர்வரத்து உயர்ந்துள்ளதால், ஒகேனக்கல் மெயினருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆர்ப்பரித்து கொட்டும் நீரை பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால், காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.