பாமகவை சீண்டினால் பதிலடி கொடுப்போம்: மாவட்ட செயலாளர் செந்தில்
பாமகவை மீது அவதூறுகளை பரப்பினால் தக்க பதிலடி கொடுப்போம் என மாவட்ட செயலாளர் செந்தில் கூறியுள்ளார்
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் கடந்த 2016ல் பாப்பிரெட்டிபட்டி சட்ட மன்ற தேர்தலில் பா.ம.க.சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின் 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் இவருக்கு பா.ம.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு அ.தி.மு.க., கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,அப்போதும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
தனது தனிப்பட்ட செல்வாக்கால் தமிழகத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றாலும், தொடர்ந்து பா.ம.க.வில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் தர்மபுரி தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் தலைமையில் , சத்தியமூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் சேர்ந்தார். அப்போது, பாமகவை கடுமையாக சத்தியமூர்த்தி விமர்சனம் செய்திருந்தார்.
இதனையடுத்து நேற்று பாப்பிரெட்டிப்பட்டியில் புதிதாக நியமிக்கப்பட்ட தர்மபுரி பா.ம.க.,கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: பா.ம.க வின் அடிப்படை உறுப்பினராக இருந்து வாக்கு வங்கிகள் இல்லாத ஒரு நகர செயலாளராக பதவி ஏற்று படிப்படியாக கட்சி நிறுவனர் தயவால் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டு தோல்வியுற்ற பிறகு தன்னை எம்எல்ஏவாக முன்னிலைப் படுத்திக் கொண்டிருந்தார்.
கட்சிக்காக எவ்வித உழைப்பையும், அவர் ஈடுபடவில்லை. போராட்டங்களில் ஈடுபடவில்லை ஜெயிலுக்கு சென்றதில்லை .ஆனால் பலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கட்சியில் இருந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு கட்சியை வளர்த்துள்ளனர்.
தற்போது தி.மு.க.,வில் சேர்ந்திருக்கும் சத்தியமூர்த்தி தன்னுடைய சுயநலத்திற்காக பல்வேறு அவதூறுகளை பாமக மீது சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார் . தொடர்ந்து அவர் பரப்பினால் பாமக சும்மா இருக்காது. அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, வன்னியர் சங்க நிர்வாகி அரசாங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் இமயவர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்