அரூர் அருகே அரைகுறையாக புதைக்கப்பட்ட மான்; வனத்துறையினர் அலட்சியம்
அரூர் அருகே வாகனம் மோதியதில் உயிரிழந்த புள்ளிமான் சாலையோரம் அரைகுறையாக புதைக்கப்பட்டு துர்நாற்றம் வீசிவருகிறது.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம், அரூர் அரூர் அடுத்த கொளகம்பட்டி காப்பு காட்டில் மான், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் இருந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடக்கின்ற நிலை இருந்து வருகிறது.
இதனால் வனப்பகுதியில், வன விலங்குகள் சாலையை கடக்கிறது என்பதை அறிவுறுத்தி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் உள்ள சாலையை புள்ளிமான்கள் கடந்துள்ளது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் அடிபட்டு, நீண்ட தூரம் இழுத்து சென்றால் உடல் நசுங்கி புள்ளிமான் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த புள்ளிமானை அரைகுறையாக பாதி உடலை மட்டும் புதைத்து விட்டுச் சென்றுள்னர். இதனை அப்பகுதி நாய்கள் கடித்து இழுத்தும், பறவைகள் கொத்தி திண்றும், துண்டு துண்டாக உடலின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. மேலும் புள்ளிமான் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.
வனப்பகுதியில் வன ஊழியர்கள் இரவு பகல் ரோந்து பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், சாலையோரம் அரைகுறையாக புதைக்கப்பட்ட புள்ளிமான் உடலை வனத் துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே இரவு நேரங்களில் வன விலங்குகள் விபத்துகளில் பாதிப்படைவதை கண்காணித்து அதனை பாதுகாப்பாக மீட்டு, வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.