ராஜேந்திரபாலாஜிக்கு உதவியதாக முன்னாள் அமைச்சரின் உதவியாளர்,டிரைவரிடம் விசாரணை
ராஜேந்திரபாலாஜிக்கு உதவியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உதவியாளர்,டிரைவரிடம தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர்.
HIGHLIGHTS
ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உதவியாளர்- டிரைவரிடம தனிப்படை போலீசார் விசாரணைக்கு நள்ளிரவில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உதவியாளர் மற்றும் டிரைவரை விசாரணைக்காக நள்ளிரவில் தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்குப் பதிவு :
ஆவின் உட்பட அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமல் ரூ. 3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மதுரை, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்ற தனிப்படை போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் தேடி வருகின்றனர். ஆனால் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உறவினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
லுக்-அவுட் நோட்டீஸ் :
மேலும் ராஜேந்திரபாலாஜி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடாமல் இருப்பதற்காக விமான நிலையத்தில் போலீசார் நேற்று முன்தினம் "லுக் -அவுட்" நோட்டீஸ் வழங்கி கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.கடந்த 2 வாரங்களாக ராஜேந்திர பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு மோசடி புகார்கள் குவிந்து வருகிறது. இதனிடையே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தர்மபுரியில் பதுங்கி இருக்கலாம் என்று தனிப்படை போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.
இதனால் தர்மபுரியில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு நெருங்கிய தொடர்புடையவர்களை தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், பகுதிகளிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர். ராஜேந்திர பாலாஜியுடன் செல்போனில் பேசியவர்கள் யார்-யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே புதுடில்லியில் ராஜேந்திரபாலாஜி பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் தனிப்படை போலீசார் டெல்லியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
உதவியாளர்-டிரைவர் :
இந்த நிலையில் நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்ட போலீசார் தர்மபுரி மாவட்டம் வந்தனர். காரிமங்கலம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராஜேந்திரபாலாஜி வழக்கு தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டனர். தர்மபுரியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திலும் அவர்கள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கார் டிரைவர் ஆறுமுகத்தை அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்த பின்னர் மாலையில் விடுவித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் சொந்த ஊரான கெரகோடஅள்ளியில் உள்ள அவரது வீட்டிற்கு தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு வீட்டில் இருந்த கே.பி.அன்பழகனின் , நேர்முக உதவியாளர் பொண்ணுவேல், கார் டிரைவர் ஆறுமுகம் ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் வைத்து ரகசியமாக விசாரித்த நிலையில் அவர்கள் இருவரையும் விருதுநகருக்கு தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள ரகசிய இடத்தில் அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.