தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: 4 பேர் கைது
தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர்; குழந்தை மீட்கப்பட்டது.
HIGHLIGHTS
தர்மபுரிமாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூரை சேர்ந்தவர் அருள்மணி; இவரது மனைவி மாலினி வயது 19. இவருக்கு, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 20ம் தேதி காலையில், அந்த குழந்தையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காவல்கட்டுபாட்டு அறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. தர்மபுரி நகர காவல்துறையினா், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனா். மேலும் தர்மபுரி எஸ்பி கலைச்செல்வன், டிஎஸ்பி அண்ணாதுரை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, கடத்திய பெண்ணின் புகைப்படங்களை வெளியிட்டு, அதன் அடிப்படையில் விசாரித்து வந்தனர். இறுதியில், குழந்தையை கடத்தியவர்களை கண்டுபிடித்து, குழந்தையையும் பத்திரமாக மீட்டு பெற்றோா்களிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையை கடத்தி சென்ற இண்டூர் பகுதியை சேர்ந்த தன்ஷியா மற்றும் அவருடைய கணவர் ஜான் பாஷா , குழந்தையை கடத்த உடந்தையாக இருந்த ரேஷ்மா (தன்ஷியா தாய்), பேகம்பீர் (பாட்டி) ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.