தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
தனிநபரின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது துலாரங்குறிச்சி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதால் பொது மக்கள் போக்குவரத்துக்கு மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் என கூறி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தனியார் ஆக்கிரமிப்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தால், தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.