கரூர் சமூக ஆர்வலர் கொலையை கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டம்.
கரூரில் சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம்
HIGHLIGHTS
கரூரில் கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகநாதன் வேன் மோதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சமூக செயற்பாட்டாளர் சங்கர் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர்கள் தங்க.சண்முகசுந்தரம், புலவர் அரங்கநாடன், தமிழ்க்களம் இளவரசன், வெண்மணி வரதராஜன், கீழப்பழுவூர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கரூரில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய கனிமவளத் துறை அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். தமிழக அளவில் செயல்படும் சமூக செயற்பாட்டாளர்களை சமூக விரோதிகள் போல சித்தரிப்பதை கைவிட்டு. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.