மெகா தடுப்பூசி முகாம்: வணிகர்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் ஆலோசனை
வரும் 12ல் நடக்கும் தடுப்பூசி முகாம் குறித்து, திருவண்ணாமலை மாவட்ட வணிகர் சங்க பிரதிநிதிகளுடன், கலெக்டர் முருகேஷ் கலந்துரையாடினார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம், ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்து வணிகர் சங்கம் ,உணவக உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம், ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது, அனைத்து உணவகங்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் ஊழியர்களுக்கும், தாங்களும் கட்டாயம் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு தடுப்பூசி முகாமில், அனைவரையும் பங்கு பெறச் செய்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.