பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் - திருவண்ணாமலை எஸ்பி
பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை, புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி கார்த்திகேயன் கூறினார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பவன்குமார் ரெட்டி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த டாக்டர் கே.கார்த்திகேயன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் முதுகலை பல் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு வருடம் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். முடித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பயிற்சி பெற்று வந்துள்ளார். பின்பு சென்னை ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார். தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து. தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
பின்னர் அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கஞ்சா, கள்ளச்சாராயம், ரவுடிசம், திருட்டு வழிப்பறி மற்றும் இதர குற்றச்செயல்களை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெண்கள் குழந்தை கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தின் அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் காக்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனது பணியை சொல் மூலம் இல்லாமல் செயலில் காட்ட விரும்புகிறேன். இவர் அவர் கூறினார். முன்னதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.