மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெண் மரணம்: உறவினர்கள் மறியல்
திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகிலுள்ள வரகூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராஜகுமாரி (வயது 38) . இவர் வயிற்றில் உள்ள நீர் கட்டியை ஆபரேஷன் மூலம் அகற்ற திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 20ந் தேதி காலையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலையில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. அப்போது ராஜகுமாரி உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்று இரவே சேர்க்கப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையில் நேற்று மாலையில், பாதிக்கப்பட்ட ராஜகுமாரியின் உறவினர்கள், ராஜகுமாரிக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாவட்ட ஆட்சியரிடம் பேசிவிட்டு தான் உடலை வாங்குவோம் என உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஆட்சியரிடம் தான் பேசுவோம் என்று கூறியதை அடுத்து ஆட்சியர் பங்களாவிற்கு ராஜகுமாரியின் உறவினர்கள் சிலரை போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அங்கு அவர்கள் ஆட்சியர் முருகேஷை நேரில் சந்தித்தபோது திருவண்ணாமலையில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் மூலம் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டால் ராஜகுமாரி உயிரிழந்து விட்டார். எனவே அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இது குறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்ததாக ராஜகுமாரியின் உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.