சிறுமிகள் பலாத்காரம்: திருவண்ணாமலை ஆட்டோ ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை
மகள் உள்பட 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த திருவண்ணாமலை ஆட்டோ ஓட்டுனருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பட்டு என்கிற வெங்கடேசன். இவர் ஆட்டோ ஓட்டுனர். தனது 12 வயது மகள் மற்றும் அதே வயதுடைய மனைவியின் தங்கையிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக வெங்கடேசனின் மனைவி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விசாரணை செய்த ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பட்டு என்கிற வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வரும் வெங்கடேசனின் வழக்கு திருவண்ணாமலை போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கினை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி குற்றவாளியான பட்டு என்கிற வெங்கடேசனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்தும், ரூபாய் 3000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார், இதனைத் தொடர்ந்து பட்டு என்கிற வெங்கடேசனை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.
குடும்பத்தில் இருக்கும் பெண்களிடமே இவ்வாறு முறைகேடாக நடந்து கொண்டவர், வெளியில் உள்ள பெண்களை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார், அவர்களிடம் எப்படி நடந்துக் கொள்வார் என்று நீதிபதி பார்த்தசாரதி கவலைகளை எழுப்பினார். பெற்ற மகள் மற்றும் மச்சினியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த திருவண்ணாமலை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பார்த்தசாரதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது அவர் இறக்கும்வரை சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதை கு குறிப்பிட்டுள்ளார்.