திருவண்ணாமலை பஸ், ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
பொங்கல் பண்டிகை விடுமுறை நேற்று முடிந்த நிலையில் திருவண்ணாமலை பஸ், ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
HIGHLIGHTS
பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி சனிக்கிழமை முதல் நேற்று வரை என 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட திருவண்ணாமலையை சேர்ந்த சென்னை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள், தொழில் செல்பவர்கள், விடுதியில் தங்கி படிப்பவர்கள் என பலர் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று முதல் பேருந்து நிலையம் ரயில்வே நிலையத்தில் குவிந்ததால் இன்று வரை பொதுமக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது.
அது மட்டும் இன்றி அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்துள்ள பக்தர்களின் கூட்டமும் மிக அதிகமாக உள்ளது. சபரிமலையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களும், மேல்மருவத்தூர் செவ்வாடை பக்தர்களும் திருவண்ணாமலையில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை முடிந்து ஊர்களுக்கு செல்பவர்கள், அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த பக்தர்கள் என அனைவரும் இன்றும் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் மிக அதிக அளவில் காணப்படுகிறது.
சென்னை, சேலம், புதுச்சேரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பஸ்களில் பொதுமக்கள் ஓடி சென்று ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஏறி இடம் பிடித்தனர்.
நேற்று வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இன்று முதல் தினமும் இயங்கக்கூடிய பேருந்துகள் மட்டுமே இயங்குவதால் அனைத்து பேருந்துகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது .
உடனடியாக அரசு போக்குவரத்துக் கழகத்தினர் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
தொடர் விடுமுறை முடிந்து திருவண்ணாமலையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் ரயில் நிலையத்தை நோக்கி படையெடுத்தனர். அங்கு காலையில் இரண்டு பாசஞ்சர் ரயில் அதாவது காட்பாடியில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் ரயில் மட்டுமே காலையில் வந்து செல்லும். மாலையில் விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு இரண்டு ரயில்கள் வரும். சென்னை மற்றும் திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்பவர்கள் காலையில் விழுப்புரம் வரை செல்லும் ரயிலில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர் . இதனால் அங்கு மிகுந்த அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
திருவண்ணாமலையிலிருந்து சென்னை, மதுரை ,பெங்களூரு ஆகிய பெரிய நகரங்களுக்கு செல்வதற்கு போதிய ரயில் வசதிகள் இல்லை. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வருகை தருவர். அப்பொழுதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதில்லை. கார்த்திகை தீபத்தன்று மட்டும் கூடுதலாக இரண்டு அல்லது மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது என பக்தர்கள் வேதனை உடன் தெரிவித்தனர்
இது போன்ற தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.