விசாரணை கைதி தங்கமணியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்
உயிரிழந்த விசாரணை கைதி தங்கமணியின் உடலில் காயங்கள் உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருகே இளையாங்கன்னி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரை கடந்த மாதம் 26ம் தேதி சாராய விற்பனை தொடர்பான விசாரணைக்குத் திருவண்ணாமலை மாவட்ட கலால் பிரிவு போலீசார் அழைத்து சென்றனர். விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வலிப்பு வந்து தங்கமணி உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல் துறையினர் தாக்கியதே தங்கமணி உயிரிழப்புக்கு காரணம் என அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 நாட்களாக பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இந்த நிலையில் தங்கமணியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிரிழந்த விசாரணை கைதி தங்கமணியின் உடலில் காயங்கள் உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிகக்ப்பட்டுள்ளது. தங்கமணியின் உடலில் மரணமடைவதற்கு முன் 12 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்கு உள்ளாக உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், "தங்கமணி இறப்பதற்கு முன்பு 12 முதல் 24 மணி நேரத்திற்குள் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு காயங்கள் இருந்துள்ளன. இடது மற்றும் வலது தோள்பட்டை பகுதியில் காயங்கள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கமணியின் இடது கை, முழங்கைகளில் சிராய்ப்புகள் இருந்தன. நாக்கின் மையப் பகுதியில் சிதைவு ஏற்பட்டிருந்தது. தங்கமணியின் இடது கையின் சுட்டுவிரல் அருகே ரத்தக்கட்டு இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.