கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை திறப்பால் திருவண்ணாமலைக்கு வெள்ள எச்சரிக்கை
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை திறப்பால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வரத்தால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 2-ந் தேதி நீர்வரத்து 12 கனஅடியாக இருந்த நிலையில் தொடர் மழையால், காலை நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக அதிகரித்து ள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.
பொதுவாக அணையின் நீர்மட்டம் 48 அடியை எட்டினால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். தற்போது 50 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் இன்றுகாலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தற்போது அணைக்கு வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த நீரை அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிகளவு தண்ணீர் வருவதால் தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ, கரையைக் கடந்து மறுபுறம் செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.