திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார். இதில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 843 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் வெங்கடேசன், தாட்கோ மேலாளா் ஏழுமலை, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, பழங்குடியினா் நலத் திட்ட இயக்குநா் செந்தில்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கந்தன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மாதப்பூண்டி கிராமத்தை சேர்ந்த புவனேசன் என்பவர் அவரது தாய், தந்தை, மனைவி மற்றும் 2 மகன்களுடன் வந்தார். திடீரென அவர் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அவர் மீது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
தொடர்ந்து புவனேசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், புவனேசன் பெங்களூருவில் காய்கறி கடையில் கூலி தொழில் செய்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு திருவண்ணாமலை அருகில் உள்ள கீழ்அணைக்கரை கிராமத்தில் 765 சதுர அடி காலிமனை வாங்கி உள்ளார். இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனால் அவரது நிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்துடன் தற்கொலை முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை மேல்விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.