திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார். இதில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 715 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் வெங்கடேசன், தாட்கோ மேலாளா் ஏழுமலை, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, பழங்குடியினா் நலத் திட்ட இயக்குநா் செந்தில்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கந்தன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது செங்கம் அடுத்த உச்சிமலைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மல்லிகா என்பவர், தனது இரண்டு பேர குழந்தைகளுடன் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
உடனடியாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விரைந்துச் சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து, மல்லிகாவிடம் நடத்திய விசாரணையில், உச்சிமலைக்குப்பம் கிராமத்தில் தகர ஷீட் அமைத்து கட்டியுள்ள வீட்டை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் இடித்து அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர்.
அந்த வீட்டை இடித்துவிட்டால், வாழ்வதற்கு வேறு இடமில்லை. எனவே, வீட்டை இடிக்க முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, சிறுவர்களை அழைத்து வந்து தீக்குளிக்க முயற்சிப்பது தவறான செயல் என காவல்துறையினர் எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து, மூதாட்டி மல்லிகா ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.