திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 587 -க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தங்கமணி, வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
விவசாயி தீக்குளிக்க முயற்சி
கீழ்பென்னாத்தூரை அடுத்த சம்மந்தனூா் கிராமத்தைச் சோந்த விவசாயி சிவசங்கரன் , திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைப் பாா்த்த போலீஸாா் சிவசங்கரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா். இதில், சம்மந்தனூரில் உள்ள தனது வீட்டுக்குச் செல்லும் வழிப்பாதையை அடைத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வருவாய்த்துறை அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, தீக்குளிக்க முயன்றேன் என்றாா். இதையடுத்து போலீஸாா் விசாரணைக்காக அவரை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
பேருந்து கேட்டு மாணவர்கள் மனு
தண்டராம்பட்டு தாலுகா மலமஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அளித்த மனுவில், மலமஞ்சனூர் புதூர் கிராமத்தில் இருந்து தானிப்பாடி மேல்நிலைப்பள்ளிக்கும், தண்டராம்பட்டு மேல்நிலைப் பள்ளிக்கும் செல்வதற்கு, மலமஞ்சனூர் புதூரில் இருந்து 4 கிலோ மீட்டர் வரை நடந்து செல்வதனால் பள்ளிக்கு கால தாமதம் ஏற்படுவதால் சரிவர கல்வி கற்க முடியவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியுள்ளனர்
கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க விவசாயிகள் மனு
வெம்பாக்கம் தாலுகா வடமாவந்தல் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
வடமாவந்தல் பகுதியில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைய உள்ளது. நாங்கள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்றோம். இந்த கல்குவாரி அமைந்தால் சுற்றியுள்ள சுமார் 200 ஏக்கர் நிலம் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இது குறித்து பொதுமக்கள் சார்பில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் ஆரம்ப கால பணி நடைபெற அனுமதி அளித்துள்ளனர்.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விவசாய நிலத்தில் கிரஷர் மற்றும் கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.