திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா, உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இந்தாண்டு தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள விநாயகருக்கு, இன்று அதிகாலை சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று வழிபாடு செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர். அவல், பொரி, பழ வகைகள், சோளம், பூக்கள், பூஜை பொருட்களை, திருவூடல் தெரு, தேரடி வீதி உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் உள்ள கடைகளில், மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டன. இதனை பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக பார்வையிட்டு வாங்கி சென்றனர். மேலும் விநாயகர் சிலைகளை அலங்காரிப்பதற்காக சிறிய வண்ண அலங்கார குடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
பொது இடங்களில் சிலை வைத்து வழிபட தடை உள்ளதால், மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.