அரசு செட் ஆப் பாக்ஸ்களை வழங்குவதில் மோசடி:அதிகாரி போலீசில் புகார்
Set Top Box -அரசு செட் ஆப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்குவதில் கேபிள் ஆபரேட்டர்கள் மோசடி செய்ததாக, தனி தாசில்தார் போலீசில் புகார் அளித்தார்.
HIGHLIGHTS
Set Top Box -திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காமல் ரூ.41 லட்சம் மோசடி செய்த 14 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில், அரசு கேபிள் டி.வி. நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தனி தாசில்தார் ரமேஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு கேபிள் டி.வி. நிறுவனம் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவச செட்டாப்பாக்ஸ்களை வழங்கியுள்ளது. அவற்றின் மூலம், மிகக்குறைந்த மாத சந்தா கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் உரிமம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களான கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய தாலுகாவில் உள்ள 14 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திடம் இருந்து கடந்த 20-9-2017 முதல் கடந்த மாதம் வரை ரூபாய் 1725.25 மதிப்புள்ள செட்டாப் பாக்ஸ்க்கு ரூபாய் 180 வீதம் வைப்பு தொகை செலுத்தி ரூபாய் 41 லட்சத்து 6 ஆயிரத்து 95 மதிப்புள்ள 2 ஆயிரத்து 380 அரசு செட்டாப்பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பெற்று கொண்டனர்.
ஆனால் அவர்கள் அரசு செட்டாப்பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்காமல், அதற்கு பதிலாக தனியார் நிறுவன செட்டாப்பாக்ஸ்களை வழங்கியுள்ளனர். மேலும் அரசு செட்டாப்பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காமல் அரசு கேபிள் டி வி நிறுவனத்தை ஏமாற்றி, மோசடி செய்து தனியார் நிறுவன செட்டாப்பாக்ஸ்களை பயன்படுத்த செய்து அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு பெருத்த வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, பொதுமக்களுக்கு அரசு கேபிள் டிவி நிறுவன சேவையை வழங்காமல் தடுத்து ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் போில், திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணையில் கனகா பாடி , சோமாஸ்பாடி , சேத்துப்பட்டு , பொறக்குறவாடி , நாயுடு மங்கலம் , படுகா சாத்தூர், கீழ்புதுப்பாக்கம் , ஏகாம்பரநல்லூர் உள்ளிட்ட பல ஊர்களில் செட்டாப் பாக்ஸ் மோசடி நடந்தது உறுதியாகி உள்ளது.
இது தொடர்பாக, செட்டாப் பாக்ஸ் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக 14 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் போில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2