பருவமழை காலத்தில் மின்சாதன பொருட்களை கவனமாக பயன்படுத்த மின்வாரியம் எச்சரிக்கை
Electricity News Today -பருவமழையின் போது மின் விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க, விழிப்புடன் இருப்பது குறித்து மின்வாரியம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டமேற்பார்வை பொறியாளர் பழனிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
Electricity News Today -மின்கம்பிகள், மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால், அதன் அருகில் செல்வதோ அதனை தொடவோ கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு, மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மின் மாற்றிகள் மற்றும் மின் பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கி இருக்கும் போது, அதன் அருகே செல்லக் கூடாது. அது குறித்து, அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட, மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.
இடி மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, கைபேசி, குளிர்சாதன பெட்டி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தாதீர்கள். மழையின் போது குளிர்சாதன பெட்டிகளை இயக்காதீர்கள். மழையின் போது வீடுகளின் சுவர்களில் நீர்க்கசிவு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இடி, மின்னலின் போது செல்போனில் அதிக நேரம் பேசுவது, சார்ஜ் போடுவதை தவிர்ப்பது நல்லது.
மின்கம்பங்கள் மற்றும் ஸ்டே கம்பியால் கால்நடைகளை கட்டக்கூடாது. மேலும் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிவிக்க, 24 மணி நேர சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் சேவை மையத்தினை 9445855768 என்ற வாட்ஸ் அப் எண், தொலைபேசி எண் 04175-232363 மற்றும் கைபேசி எண் 9499970214 ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவற்றை தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் தடை மற்றும் மின்சார பொருட்கள் சேதாரம் போன்ற புகார்களை தங்கள் பகுதிக்கு உட்பட்ட பிரிவு அலுவலர் மற்றும் உதவி செயற் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மின் தடை குறித்த புகார்களை 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களது மின் தடை குறித்த புகார்களை கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் மையத்தில் பதிவு செய்தால் மின் தடை நிவர்த்தி செய்யப்படும் என, திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2