முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: திருவண்ணாமலை கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது இடங்களுக்கு வரும்போது முகக் கவசம் கட்டாயம் என, மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில், பொதுஇடங்களில் வரும்போது, முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரித்துள்ளார். மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். இத்துடன் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு தலா ரூபாய் 500 வீதம் அபராதம் விதிக்கப்படும். அரசு , தனியார் அலுவலகங்களில் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், முகக்கவசம் அணிந்து வருவதை அவற்றின் நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அரசு, தனியார் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணம் செய்வதை நடத்துநர், ஓட்டுநர் கண்காணிக்க வேண்டும். அனைத்து வியாபார மையங்களிலும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து கடைக்கு வர அறிவுறுத்த வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை, கோயில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் பொது மக்கள் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவு வரும்வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.