திருவண்ணாமலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் மக்களுடன் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு முகாமினை ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நான்கு நகராட்சிகளில் முகாம்களும் கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம், செங்கம், புதுப்பாளையம், போளூர், சேத்துப்பட்டு, களம்பூர் ,கண்ணமங்கலம், தேசூர், பெரணமல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் 20 முகாம்களும் தொடங்கி நடைபெற்று வருகிறது,
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் முதல் நாள் நடைபெற்ற முகாமினை அமைச்சர் வேலு தொடங்கி வைத்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆறாவது நாளாக நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், கோட்டாட்சியர் மந்தாகினி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன். நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பதினெட்டாவது வார்டை சேர்ந்த கோபிநாத் என்பவர் முகாமில் கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்து புதிய மின் இணைப்பினை பெறவும் ஆணைகளை வழங்கினார்.
பின்னர் திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தாமரை நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த முகாமில் நகர மன்ற உறுப்பினர்கள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.