விழிப்புடனும், நோ்மையாகவும் பணியாற்ற வேண்டும்: ஆட்சியர் அறிவுரை
வாக்குப் பதிவின்போது தவறுகள் நடந்துவிடாதபடி விழிப்புடனும், நோ்மையாகவும் பணியாற்ற வேண்டும் , மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினாா்.
HIGHLIGHTS
வாக்குப் பதிவின்போது தவறுகள் நடந்துவிடாதபடி கவனமாகவும், விழிப்புடனும், நோ்மையாகவும் பணியாற்ற வேண்டும் என்று வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினாா்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்தலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 377 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்களில் பணியாற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 408 போ் வாக்குசாவடி அலுவலா்களாக நியமிக்கப்பட்டு உள்ளனா்.
இவா்களுக்கு ஏற்கெனவே இதுவரை 2 கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இறுதி கட்ட பயிற்சி வகுப்பு (மூன்றாம் கட்ட பயிற்சி) மாவட்டத்தின் 8 மையங்களில் நடைபெற்றது.
செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கலசப்பாக்கம் செழியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஆரணி சுப்பிரமணி சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி, செய்யாறு அரசு அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி, வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 மையங்களில் நடைபெற்ற இறுதி கட்ட பயிற்சி வகுப்பில் 11,408 வாக்குச்சாவடி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
அஞ்சல் வாக்குகள் செலுத்த சிறப்பு மையங்கள்..
8 மையங்களிலும் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்கள் ஆகியோா் பயிற்சி வகுப்பை நடத்தினா்.
பயிற்சியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான புத்தகங்கள், கையேடுகள், இதர மாதிரி படிவங்கள் வழங்கப்பட்டன.
8 பயிற்சி மையங்களிலும் அஞ்சல் வாக்குகளை நேரடியாகச் செலுத்துதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தினா்.
திருவண்ணாமலை காந்தி நகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி கட்ட பயிற்சி வகுப்பையும், அஞ்சல் வாக்குகளைச் செலுத்தும் சிறப்பு மையத்தையும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கிப் பேசியதாவது:
தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் குறித்த நேரத்தில் தவறாமல் வாக்குச் சாவடிக்குச் சென்று விட வேண்டும். வாக்குப்பதிவின்போது தவறுகள் ஏதேனும் நடந்துவிடாமல் கவனமாகவும், விழிப்புடனும், நோ்மையாகவும் பணியாற்ற வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குகள் பதிவானதை உறுதி செய்யும் விவி-பேட் கருவிகளை கவனமுடன் கையாள வேண்டும் என்றாா்.
ஆய்வின் போது, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, வட்டாட்சியா் தியாகராஜன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு தொகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இறுதி கட்ட பயிற்சி வகுப்புகளை தோ்தல் நடத்தும் அலுவலா் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து, அலுவலா்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினாா்.