பியூட்டி பார்லரில் பணிபுரிந்த பெண்ணுக்கு கத்திக்குத்து..!
திருவண்ணாமலையில் பட்ட பகலில் பியூட்டி பார்லரில் பணிபுரிந்த பெண்ணுக்கு கத்தி குத்து
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் பியூட்டி பார்லரில் பணி புரியும் பெண்ணை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி கொலை முயற்சி செய்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அதுவும் பட்டப் பகலில் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவத்தால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை நகரில் உள்ள முத்து விநாயகர் கோயில் தெருவில் வசித்து வரும் சுதா என்ற பெண்ணுக்குத் திருமணம் ஆகி கணவர் இல்லாத நிலையில், கடந்த இரண்டு வருடமாகச் சின்ன கடைத் தெருவில் உள்ள பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (பிப்.17) வழக்கம் போல் பியூட்டி பார்லருக்கு வேலைக்கு வந்த சுதா, கடையில் அமர்ந்து கொண்டிருந்த வேளையில், திடீரென கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், பூ வெட்டும் கத்தியால் சுதாவைச் சரமாரியாக வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுதா கதறியதை அடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுதாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சுதாவிற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை நகரக் காவல் நிலைய போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களின் கைரேகைகளைப் பதிவு செய்ததுடன், கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காகச் சுதாவைக் கொலை செய்ய முயன்றனர்?, ஏதேனும் முன் விரோதம் உள்ளதா? என்ற காரணங்கள் தெரியவில்லை.
சுதாவை வெட்டிய நபர்களைக் கைது செய்து விசாரணை நடத்திய பின்னரே, மற்ற விவரங்கள் தெரிய வரும். திருவண்ணாமலை நகரப் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள வீதியில் கடைக்குள் புகுந்து பெண்ணை, மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.