அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமியில் கட்டண தரிசனம் ரத்தால் 1.18 லட்சம் பேர் தரிசனம்
அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமியில் கட்டண தரிசனம் ரத்தால் 1.18 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவர் கிரிவலம் வந்த பிறகு பக்தர்கள் பல பேர் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கமாகும் சிலர் சாமி தரிசனம் செய்துவிட்டு பிறகு கிரிவலம் செல்வர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தாலும் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 70 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரையில் இருந்தது.
பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என்கின்ற வகையில் இரு பிரிவுகளாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்து அறநிலையத்துறை சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி தினங்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்தது அனைவருக்கும் பொது தரிசனத்தை உறுதி செய்தது இதன் காரணமாக கோவிலுக்குள் அனைத்து பக்தர்களும் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். கட்டணமில்லா பொது தரிசனம் மூலம் அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 10:30 மணி வரை தொடர்ச்சியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்
அதன்படி, கோயிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை, கோபுர நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர் ஸ்கேனர் கருவியை கடந்து செல்லும் நபர்கள் மூலம் கணக்கிடப்பட்டது. அதன்படி, கடந்த பவுர்ணமி நாளில் மட்டும் 1.18 லட்சம் பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த பவுர்ணமி நாட்களில் சராசரியாக அதிகபட்சம் 70 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரையிலான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, ஒற்றை வரிசை பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டதால், கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி கடந்த பௌர்ணமி நாளில் மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்திருப்பதாக கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இனி வரும் அனைத்து பவுர்ணமி நாட்களிலும் கட்டண தரிசனம் ரத்து செய்திருப்பதால், பக்தர்களை அதிக எண்ணிக்கையில் தரிசனத்துக்கு அனுமதிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், கட்டண தரிசனம் ரத்து செய்திருப்பதால், கோயிலுக்கான வருவாய் குறைந்தபோதிலும், பக்தர்களுக்கான தரிசன வாய்ப்பும், வசதியும் ஏற்பட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.